Friday 1 August 2014

வாய் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

வாய் என்பது இரண்டு உதடுகளோடு முடிந்து விடுகிற சமாச்சாரமில்லை. கன்னம், நாக்கு, பற்கள், ஈறுகள், சுவை நரம்புகள், தொண்டை என்று வாயின் பகுதிகள் நீள்கின்றன.

இந்தப் பாகங்களில் எதை புற்றுநோய் தாக்கினாலும் அதற்கு வாய் புற்றுநோய் என்று தான் பெயர். வாயில் புற்றுநோய்த் தாக்கத்தின் சிறு அறிகுறி இருந்தாலும் போதும், அது வாயின் இந்த எல்லாப் பகுதிகளையும் மளமளவென்று தாக்கி அழிக்கும் அபாயம் உள்ளது.

வயது கூடக் கூட இந்த வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். வாயில் புற்றுநோய் ஏற்பட மேலும் பல காரணங்கள் உள்ளன. அவற்றைத் தவிர்த்தால், நாமும் வாய்ப்புற்று நோயிலிருந்து தப்பிப் பிழைக்கலாம். அவை குறித்து பார்க்கலாம்.

புகையிலை

வாய்ப் புற்றுநோய்க்கு மிக முக்கியமான காரணம் புகையிலை உபயோகிப்பது தான். சிகரெட், பீடி மூலம் புகைப்பதால் மட்டுமல்ல, புகையிலையை நேரடியாக மென்று தின்றாலும் இந்த நோய் தாக்கும். எனவே இந்தப் புகையிலையைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால்

ஒருவர் வாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க, குடிப்பழக்கத்திலிருந்தும் அவர் மீண்டு வர வேண்டும். மது அவருடைய வாயைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் தன்மை கொண்டது.

சூரிய ஒளி

ஒருவருடைய உடலில் சூரிய ஒளி அதிகம் படுவதால் அவருக்கு தோல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். அது மேலும் வளர்ந்து, வாய்ப் புற்றாகவும் மாறக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. எனவே, சூரிய ஒளி உடலில் படுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது உதடுகளில் சன்ஸ்க்ரீன் க்ரீமைத் தடவ வேண்டும்.

வாய் அசுத்தம்

வாய்க்குள் உள்ள அனைத்துப் பகுதிகளையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் வாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் பற்களை நன்றாக பிரஷ் செய்து, நாக்குகளையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

தினமும் நன்றாக உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்வதன் மூலமும் புற்றுநோய் ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதால் நோயெதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகமாகும்.

ஆரோக்கிய உணவு

புற்றுநோய்களைத் தவிர்க்க பச்சைக் காய்கறிகள், தக்காளி, பீன்ஸ், க்ரீன் டீ உள்ளிட்ட பல உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது.

link 

No comments:

Post a Comment