Saturday 9 November 2013

ட்விட்டரில் இந்தியருக்கு ரூ.25,000 கோடி

நியூயார்க் : சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால்... ஜேபி மோர்கன் கம்பெனி தலைவர் ஜெமி டைமோன்... இப்படி பெருங் கோடீஸ்வரர்கள் ட்விட்டரில் பல கோடிகளை முதலீடு செய்து லாபம் குவிக்கிறார்கள் என்றால் பெரிய விஷயம் அல்ல. ஆனால், ஊர், பெயரே தெரியாத ஒரு இந்தியர் ட்விட்டரில் 25,000 கோடி ரூபாய் முதலீடு வைத்திருக்கிறார் என்றால் வாயை பிளக்க கூடிய தகவல் தானே.

ஆம், படித்து முடிக்கும் போது நீங்கள் மட்டுமல்ல, ஏற்கனவே செய்தி பரவி பல அமெரிக்கர்கள் பிளந்த வாயை இன்னும் மூடவில்லையாம். இதில் இன்னும் முக்கியம் என்னவென்றால், ட்விட்டரில் சாதித்த இவர் முகத்தை ட்விட்டரிலும் சரி, பேஸ்புக்கிலும் சரி காட்டவே இல்லை.  சுகைல் ரிஸ்வி, வயது 47. முதலீடுகளுக்கு லாபம் குவிக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள் குவிந்த சிலிக்கான் வேலிக்கோ, கலிபோர்னியாவில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் என்று பெயர் பெற்ற சாண்ட் ஹில் ரோடு பகுதியிலோ இவர் பெயர் பிரபலமானது அல்ல.

ஆனால், சமீபத்தில் பங்குச்சந்தையில் வெளியான அறிக்கையில், ட்விட்டரில் அமெரிக்கர் அல்லாத ஒருவர் 15.6 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார் என்ற தகவல் பல அமெரிக்க பங்கு முதலீட்டு நிறுவனங்களை, கோடீஸ்வர முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது. க்ளெய்னர் பெர்கின்ஸ், காபீல்டு அண்ட் பையர்ஸ், ஆக்செல் போன்ற படா  அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் எல்லாம் ரிஸ்வி யார் என்று தெரியாமல் திகைக்கின்றன. பெஞ்ச்மார்க் கேபிடல், ஸ்பார்க் கேபிடல் ஆகிய இரு மெகா முதலீட்டு நிறுவனங்கள் கூட, கடும் முயற்சி செய்தும் ட்விட்டர் பங்குகள் கிடைக்காத போது ரிஸ்வி கம்பெனிக்கு எப்படி கிடைத்தது  என்ற கேள்வி, இவர்கள் மண்டையை காய வைத்துள்ளது.

இந்தியாவில் பிறந்து லோவா மாகாணத்தில் வளர்ந்த ரிஸ்வி, ட்விட்டரில் கிடைத்த நண்பர்கள் துணையுடன் சிறிய அளவில் 2007 ல் முதலீட்டு கம்பெனியை ஆரம்பித்தார். பிடிலிட்டி, டி ரோவ் பிரைஸ், பிளாக்ராக் போன்ற முதலீட்டு நிறுவனங்கள் துணை கிடைத்தது. இரவு விருந்துகள் மூலம் சிலிக்கான் வேலி, சாண்ட் ஹில் ரோடு நட்புகள் விரிவானது.   அப்படி கிடைத்தது தான், ஜேபி மோர்கன் நிறுவன தலைவர் ஜெமி டைமோன்,

விர்ஜின் குரூப் ரிச்சர்ட் பிரான்சன், யுட்யூப் தலைமை  அதிகாரி சலார் கமாங்கர், ட்விட்டர் இணை நிறுவனர்கள் ஜேக் டோர்சி, இவான் வில்லியம்ஸ் என்று பலரின் நட்பு கிடைத்தது. சிறிய அளவில் கிடைத்து வந்த ட்விட்டர் பங்குகள், ஒரு சமயம் டோர்சியின் கம்பெனி தன்னிடம் உள்ள ட்விட்டர் பங்குகளை விற்க தயாராக இருப்பதாக சொல்ல, அப்படியே வாங்கி விட்டார் ரிஸ்வி. இப்படி  தான் ட்விட்டரில் தன் ஆதிக்கத்தை பதித்தார்.

இவர் உதவியாளர் ட்ராவர்ஸ் கூறுகையில், ‘ரிஸ்வி பற்றி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ட்விட்டர் பங்குகளை வைத்துள்ளோம்.
அமெரிக்காவில் சாதாரண  அளவில் ஆரம்பித்த நிறுவனம்  இது என்றாலும், ஹாலிவுட்டிலும் கூட பங்குகளை வைத்துள்ளது என்று அலட்டாமல் சொல்கிறார்.

எக்ஸ்ட்ரா தகவல்

இன்டர்நெட்டின் எஸ்எம்எஸ் என்று அழைக்கப்படும் ட்விட்டரில் 55 கோடி பேர் உறுப்பினராக உள்ளனர்; தினமும் 34 கோடி தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. உலகம் முழுக்க அதிகம் பார்க்கப்படும்  முதல் பத்து வெப்சைட்களில் ஒன்று ட்விட்டர்.