Friday 8 August 2014

2200 ஆண்டு பழமையான சுடுமண் உறைகிணறு ஏரி தூர்வாரும்போது கண்டுபிடிப்பு

வடலூர்: கடலூர் அருகே ஏரி தூர்வாரும் போது 2200 ஆண்டு பழமையான சுடுமண் உறைகிணறு கண்டு பிடிக்கப்பட்டது. கடலூர் முதுநகர் அருகே உள்ள அப்பர் குட்டைக்கும் தெற்கே உள்ள கொண்டங்கி ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏரியை தூர்வாரும் போது வட்டவடிவில் மண்ணால் செய்யப்பட்ட தொட்டி கிடைத்திருப்பதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத் துறையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் கூறியதாவது:
இது சுமார் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கேணிக்கு பயன்படுத்தப்பட்ட வட்டவடி விலான சுடுமண் உறை. இது 42 செ.மீ உயரம், 54 செ.மீ விட்டம் 181 செ.மீ சுற்றளவு கொண்டதாகும்.

மேலும் ஏரியின் தெற்கு பகுதியில் கருப்பு, சிவப்பு மட்கல ஓடுகளும், சுமார் 200 அடி தூரத்தில் முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகமும் கிடைத்துள்ளது. இவற்றை ஆய்வு செய்ததில் இப்பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. உறைகேணிக்கு பயன்படுத்தப்பட சுடுமண் உறை நன்கு சுடப்பட்டதாகும். இதன் தயாரிப்பு தொழில் நுட்பத்தை பார்க்கும் போது, கி.மு. 2ம் நூற்றாண்டை சார்ந்தது என அறியமுடிகிறது. சுடுமண் உறை கேணி கிடைத்த இடத்தில் கடற்கரை மணல் பெருமளவில் கிடைப்பதால் அக்காலத்தில் இந்த பகுதி வரை கடல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
link

No comments:

Post a Comment