Saturday 21 June 2014

வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்குழந்தை உள்ள பெற்றோரா? படியுங்கள்.

உங்கள் வீடுகளில் அல்லது தெரிந்தவர் வீடுகளில் வயசுக்கு வரும் பக்குவத்தில் பெண்கள் இருக்கிறார்களா...? இந்தப் பதிவைப் படியுங்கள்.
என் தோழி இளம் மருத்துவர். அவள் கடந்த சில மாத காலமாக குழந்தைகள் பிரசவிக்கும் பிரிவில் பணி செய்கிறாள். அவள் சொன்னதை உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

அவள் அங்கே இருந்த நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து குழந்தைகள் பிறந்தால் அதில் நான்கு குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகளாகவும் இரண்டு குழந்தைகள் குறைமாத குழந்தையாகவும் தான் பிறக்கின்றனவாம்.
அவள், “பொதுவாக மருத்துவர்கள் 25 வாரத்திற்கு மேல் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தைகளுக்குத் தங்களால் முடிந்த அளவிற்கு மருத்துவம் செய்து காப்பாற்றுவார்கள்.
25 வாரத்திற்குள் குழந்தை வெளியாகிவிட்டால் அந்த குழந்தைக்கு எந்த மருத்துவமும் பார்க்காமல் உரியவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விடுவார்கள். பொதுவாக 25 வாரத்திற்குள் பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். அப்படியே காப்பாற்றினாலும் அக்குழந்தைகள் ஊனமுள்ள குழந்தையாகத்தான் இருக்குமாம்.
தவிர போன வாரத்தில் நீண்ட காலமாக குழந்தையில்லாத பெண்ணுக்கு ஐந்தாவது மாதத்திலேயே குழந்தைப் பிறந்துவிட்டது. அந்தப் பெண் அழுது கேட்டுக்கொண்டற்கு இணங்க, மருத்துவர்கள் அக்குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார்கள். பிறந்த போதே குழந்தை மூச்சிவிட சிரமப்பட்டதால் அந்த 900 கிராமே உள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜன் குழாய்கள் இணைத்து மூன்று நாட்கள் வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதன் துடிப்பு மெல்ல மெல்ல அடங்க அந்தப் பெண்ணிடம், “இனி எங்களால் காப்பாற்ற முடியாது“ என்று சொல்லவும் அந்த பெண் “என் குழந்தையை என்னிடமே கொடுத்துவிடுங்கள். நான் காப்பாற்றிக் கொள்கிறேன்“ என்று அழுதாள்.
மருத்துவர், “உங்களின் குழந்தைக்குப் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் குழாயை எடுத்ததும் இறந்து விடும். ஆனால் வேறு வழியில்லாமல் நாங்கள் அதை எடுக்கத் தான் வேண்டியுள்ளது“ என்று சொல்லவும், அந்தப் பெண் “என் எதிரிலேயே எடுங்கள்“ என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்றிருந்தாள்.
ஆக்ஸிஜன் குழாயை எடுத்ததும் அந்தக் குழந்தை இரண்டு நிமிடத்திலேயே இறந்து விட்டது. பாவம் அந்தப் பெண் கதறி அழதாள்“ என்று என் தோழி சொன்னாள்.
எனக்கும் கவலையாக இருந்தது. இருந்தாலும் நான், “நீண்ட காலமாக குழந்தையில்லாத பெண்ணுக்கு ஏன் ஐந்தாவது மாதத்திலேயே குழந்தைப் பிறந்தது.?“ என்று கேட்டேன்.
“அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே கருப்பை வலுவில்லாமல் இருந்தது. அவளுடைய டாக்டர் அதிக வேலைகள் செய்யாமல், வெயிட்டான பொருட்கள் எதையும் தூக்காமல் முடிந்தவரையில் ரெஸ்ட்டிலேயே இருக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் எப்படி இருந்தாளோ.... இப்படி ஆகி விட்டது. தவிர இப்போது இருக்கும் பெண்களுக்கு முதல் முறையிலேயே கரு தங்குவது இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வெளியாகி விட்டு தான் கருவே தங்குகிறது.“ என்றாள்.
இதைக் கேட்டதும் எனக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.
பெற்றோர்களே.... ஏன் இப்போது இருக்கும் பெண்களுக்கு இப்படியாகிறது என்று யோசித்தால், பெண்களின் கருபப்பை வலு இல்லாமல் இருப்பது தான் காரணம் என்பது நமக்கே புரிந்து கொள்ள முடியும்.
நான் பெரிய பெண்ணாகி வீட்டிற்குள்ளேயே இருந்த பதினொரு நாளும் காலையில் எழுந்ததும் இரண்டு நாட்டு கோழி முட்டையை உடைத்து எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பச்சையாகவே வாயில் ஊற்றுவார்கள். பிறகு திரும்பவும் உடைத்த அதே இரண்டு முட்டை அளவு நல்லெண்ணையை வாயில் ஊற்றி விழுங்கச் சொல்வார்கள்.
அதன் பிறகு நிறைய நெய் ஊற்றி செய்த உளுந்து களியைச் சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பாட்டுடன் இந்த மூன்றையும் நிச்சயம் பதினொரு நாளும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொடுப்பார்கள். (ஏன்டா நாம் பெரியபெண் ஆனோம் என்று இருந்தது) இருந்தாலும் சில நாட்கள் சாப்பிட்டேன்.
ஆனால் இப்போது இருக்கும் பெண் பிள்ளைகள் அதையெல்லாம் சாப்பிடுவதை மிகவும் கேவலமாக நினைக்கிறார்கள். தவிர இங்கே வயதுக்கு வந்த விசயத்தைக் கூட தன் பெற்றோர்களிடம் தெரிவிப்பது இல்லையாம்.
பெற்றோர்கள் (நம்மவர்களே) “இப்போது இருக்கும் குழந்தைகள் நிறைய செர்லக்ஸ் சாப்பிடுகிறார்கள். அதிலேயே எல்லா சத்தும் இருக்கிறதே“ என்று அலட்சியமாக சொல்கிறார்கள். இது தவறு.
ஒரு பெண் பூப்படைந்த நாட்களில் அவளின் கருப்பைக்கும் உடலுக்கும் போஷாக்கான உணவைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் பிற்காலத்தில் குழந்தைபிறக்கும் பொழுது ஏற்படும் பிரட்சனைகள் குறையும்.
பெற்றோர்கள் உணர்ந்து செயல்படுங்கள்.
link 

No comments:

Post a Comment