Monday 3 June 2013

தமிழகத்தில் புதிய எப்.எம். நிலையம் தொடங்கும் சீன வானொலி

தமிழகத்தில் புதிய எப்.எம். நிலையம் தொடங்கும் சீன வானொலி!
#######################################

சீனாவின் சர்வதேச வானொலி நிலையம் 1963-ம் ஆண்டு முதல் தமிழ் வானொலிப் பிரிவை நடத்தி வருகிறது. ஐம்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடும் இந்த வருடத்தில் தமிழ் நாட்டில் எப்.எம் வானொலி நிலையத்தை தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சீனா ரேடியோ இண்டர்நேஷனல்’ 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ் ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது. சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.

அந்தச் சமயத்தில் அவர்களுக்கு தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து மாகறல் கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார். இவரை அடுத்து சின்னத்தம்பி, சாரதா சர்மா, முனைவர் ந. கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் வல்லுநர்களாகச் சீன வானொலியில் சேவையாற்றினர். முதலில் தமிழ் கற்ற அந்த மாணவர்களைக் கொண்டே அந்த முதல் தமிழ் ஒலிபரப்பு 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

தொடக்க காலத்தில் அதன் பெயர் “பீகிங் வானொலி’ என்று இருந்தது. அதன் பின் “பெய்ஜிங் வானொலி’ எனப் பெயர் மாற்றம் பெற்று இன்று “சீன வானொலி’ என்று தமிழிலும் “சீனா ரேடியோ இண்டர்நேஷனல்’ என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. சீன வானொலி நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமானவை.

தொடக்க காலத்தில் அரை மணி நேரமே ஒலிபரப்பி வந்த தமிழ் சேவை 2004 முதல் ஒரு மணி நேரச் சேவையாக உலா வந்தது. தினமும் இந்திய நேரம் இரவு 7.30 முதல் 8.30 வரையும், மீண்டும் 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. மீண்டும் அதே நிகழ்ச்சிகள் மறுநாள் காலையும் 7.30 முதல் 8.30 வரையும், 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது. சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிற்றலை வானொலிப் பெட்டியில் மட்டுமே கேட்க முடியும்.

இவர்கள் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம், சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை மற்றும் கலாசாரத்தினை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.

“தமிழ் மூலம் சீனம்’ என்ற பெயரில் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. மிகவும் எளிதாக, மெதுவாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடத்திட்டங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எவரும் எளிதாக இந்த நூல்களைக் கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

மேலும் விரிவான செய்திகளுக்கு:

http://www.aanthaireporter.com/?p=31392

No comments:

Post a Comment